Thursday, May 5, 2011

தூவானம் - 2



இரவின் நெடும்பயணத்தில் 
விடியல் - ஒரு 
தடை கல் தான்

******
இரவு முழித்துகொண்டிருக்க 
பகல் நிசப்தமாக
உறங்கிகொண்டிருக்கிறது

******

 கன்னி களையப்படும் 
இரவு - இன்னும் ஒரு பகலுக்கும்
மற்றொரு பகலுக்கும் 
கண்ணியாகவே இருந்து
இணைத்துகொண்டிருக்கிறது

******
இரவின் இலக்கணம் 
இருள் என்றால் - என் 
வாழ்வு ஒரு இரவு தான்
இலக்கண பிழை
இங்கே விதிவிலக்கு

******

யுகங்களாக காதலித்து
கொண்டிருக்கிறது  இரவு
காத்து காத்து 
பூத்து கொண்டிருகிறது 
பூக்களை யாருக்காகவோ!!

******

Wednesday, May 4, 2011

'சின்ன குயில்' பாடும் பாட்டு கேட்குதாதா...???.....



சின்ன குயில் பாடும் பாட்டு கேட்குதாதா...???

எனக்கு இப்போது நினைத்தாலும் கேட்டுகொண்டிருக்கிறது. எப்படி அழுது அரற்றிருப்பார் என்று... எத்துனை மென்மையான பாடகி. முகத்திலும் குரலிலும் எப்போதும் கருணையை வழியவிட்டு கொண்டிருக்கும் அவருக்கு இப்படி ஒரு சோகம் கவ்விக்கொள்ள வேண்டுமா..? திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிறக்கும் குழந்தைகள் தெய்வத்தின் வரம் என்றால், அதனை தட்டி பறிக்கும் தெய்வங்கள் எத்துனை குரூரமானது. எப்படியும் கடவுளை எல்லோரும் திட்டி தீர்த்திருக்ககூடும், எண்ணற்ற சாபங்களை வழங்கியிருக்ககூடும்... இனி எந்த தெய்வங்களுக்கும் பிள்ளைகள் பிறக்காமல் போகக்  கடவது....

இனி அந்த மென் சோக குரலை எப்போது கேட்டாலும் வலியும் வேதனையும் மனதை கணக்க செய்யும் தானே.... மனசு சரியில்லாத பல பொழுதுகளில் நம் மனதை ஆற்றிய இந்த இசைவானியின் மனதை இப்போது யார் ஆற்றுவார்... 

"ஏதேதோ எண்ணம்" வளர்கிறது...இசையின்  "பாடறியாது, படிப்பறியாது" இருந்த என்னை இவரின் குரல் தான் "என்னவோ ராகம் என்னன்னவோ தாளம், தலைய ஆட்டும் புரியாத கூட்டம்" என்று அறிமுகம் செய்து, "சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கப்புறந்தான்" என்று உபதேசமும் செய்து இசையை பயிற்றுவித்தது... 

எனது மொபைலில் அடிக்கடி ரிப்பீட் போட்டு கேட்கும் பாடல் "எங்கே எனது கவிதை". சமிபத்தில் ஒரு பேருந்து பயணத்தில் திரும்பவும் அந்த பாடலை கேட்டேன். அந்த பாடலின் காதல் வலி... அன்றைக்கு கேட்கும் போது ஒரு தாயின் உயிர் வலியாகவே உணர்ந்தேன்... அப்போது ஏற்ப்பட்ட மனஓட்டங்கள் தான் இந்த பதிவு.... 

அந்த பாடலின் முதல் சரணம் சற்று மாற்றி...

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
மையல்(?) பாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த குழந்தையை 
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன் 

வேறு என்ன சொல்லமுடியும்....எத்தனையோ பேருக்கு நம்பிக்கை ஊட்டிய அவர் பாடலின் துணை கொண்டே...

"மனமே.... மனமே நீ மாறிவிடு...." 

Wednesday, February 2, 2011

'ஓ' - பக்கங்கள் வாசகர் வட்டம்:

ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்..


தமிழ் நாட்டு ஆளுமைகளில் மிக முக்கியமானவரும், அறிவுசார் கருத்துகளில் சக மனிதனுக்காக எந்த வகையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து இயங்குவதில் முதன்மையானவருமான எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விமர்சகர் திரு.ஞாநி அவர்கள், பெங்களுருவிற்கு வருகை தருகிறார். அலுவல் நிமித்தமாக பெங்களுரு வரும் அவர், அப்படியே வாசகர்களையும் சந்தித்து (பிப்ரவரி 10 ம் தேதி) கலந்துரையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

49ஓ, விகிதாசார தேர்தல் முறை, 2011 சட்டமன்ற தேர்தல், கோலம், கேணி, தீம் தரிகிட, பரிக்ஷா, இடஒதுக்கீடு,அரசியல், சமுகம், வாழ்க்கை, என பல தளங்களில் அவரிடம் கேள்விகள் கேட்டு அளவளாவலாம். அவரை சந்திக்க விரும்பும் வாசக நண்பர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...

இடம்: பெங்களூர் தமிழ் சங்கம்.

நாள்: 10 - 02 - 11 (வியாழன்)
நேரம்: மாலை 6 மணி.

தொடர்புக்கு: thiruji@gmail.com, 09980122730

Saturday, January 22, 2011

'கீற்று'வில் என் சிறுகதை

தமிழ் இணைய இதழ்களின்  மிக முக்கியமான 'கீற்று'வில் எனது முந்தய பதிவான "நீளமான ராத்திரி... ஊதலான மார்கழி..."- சிறுகதை வெளியாகியுள்ளது... 

அதன் சுட்டி...
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12492:2011-01-18-20-00-09&catid=3:short-stories&Itemid=266

வெளியிட்டதற்கு நன்றி....
மிக்க அன்புடன்...
திரு...

Monday, January 3, 2011

நீளமான இராத்திரி... ஊதலான மார்கழி...

காதில் justin bieber-ன் latin girl, david guetta-வின் one more love இரைந்துகொண்டிருக்கிறது என்றோ, bob marley, eminem, rihanna, akon எல்லோரும் வரிசையில் காத்துகொண்டிருக்கிறார்கள் என்றோ, 'மூடு' மாறினால் shakira-வோ, jackson-னோ அழைக்கபடுவார்கள் என்றோ பார்ப்பவர்கள் நினைக்ககூடும். காரணம் என் levis track jeans, retro tops மற்றும் reebok shoe.

உண்மையில் 'சின்ன கௌண்டர்' முத்துமணி மாலையும், கரகாட்டகாரன் மாங்குயிலே பூங்குயிலேயும் தான் காந்தபுலத்தின் மின்விசை அதிர்வுகளால் என் காதில் வழிந்துகொண்டிருந்தது. மாநகரங்களில் குடிபெயரும் முதல்தலைமுறைகளின் பிரதிபலிப்பு என்னுள் இன்னமும் இருப்பது இது ஒரு அடையாளம்.


அன்று பஸ்ஸில் இடம் கிடைத்துவிட்டது. பெங்களுருவை தன் உடையாலும் நடையாலும் சுமந்து கொண்டிருக்கும் ஊரான்களை பஸ்ஸில் இடம் பிடிக்க ஓடும்போது எளிதாக கண்டுபிடித்துவிடலாம். போன முறை ஊருக்கு திரும்ப முட்டி மோதி இடம் பிடித்தபோது பெருத்த பெண்மணியின் உருவத்தில் இருந்த 007 என் ஊரான்தனத்தை கண்டுபிடித்தால், "பட்ச்ச புள்ளயா இது... அவுசரம் இன்னா உனுக்கு... பொறுமயா போயேன்..." என்று கத்தினாள். போனில் லைனில் இருந்த நண்பன் "whats happening da" என்றான், "nothing da... அந்த அக்காவுக்கு வழிதெரியலயாம் கேட்டுட்டுருக்காங்க" என்று தப்பித்தேன்.

என்ன செய்வது சொகுசு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் புக் செய்து ஆயாக பயணம் செய்ய எனக்கு கொடுத்துவைக்கவில்லை. என் சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள தக்கோலம் கிராமம். அங்கே செல்ல சராசரி பேருந்துகளில் தான் மாறிமாறி போக வேண்டும். ஏழுமணி நேர பயணத்தில் கால்முட்டியும், நடுமுதுகும் பெயர்ந்து போகும்.


வாகனங்களை உண்டு செரித்த மலைப்பாம்பாக வளைந்து கிடக்கும் தேசிய நெடுஞ்சாலையின் நீண்ட இரவுகளில் பேருந்துகள் நீந்திகொண்டிருந்தன.


பெங்களூரின் குளிரை மார்கழி மாதம் சென்னைக்கு கடத்திகொண்டுருந்தது. நேரம் 9 மணியை கடந்திருந்தது . காலை நான்காகும் போய் சேர. எப்போதும் முதல் ஒரு மணி நேரம் தூங்க முற்ப்பட்டு தோல்வியடைவேன். இப்போது பழக்கமாகியிருந்தது. அப்படி இப்படி என்று அரை மயக்கத்தில் பயணத்தை கழித்துவிடுவேன்.


எனக்குள் இருக்கும் ஊரான்தனத்தை மற்றவர்களுக்கு காட்டாமல் பேருந்தின் அசௌகர்யங்களை உச்சு கொட்டி அடுத்தவர்களுக்கு கடத்தி தோல்வியுறுவேன்.
அவர்கள் உட்கார்ந்த மாத்திரத்தில் தூங்கியிருப்பார்கள். என்னைப்போல் ஓங்குதாங்காக வேலை செய்யும் யாவரும் தூங்குவதற்கு சிரமப்பட, இவர்கள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள் தான். வஞ்சனை இல்லாமல் உழைப்பதும், வஞ்சகம் இல்லாமல் தூங்குவதும் எனக்கு புதிதில்லை. ஊரில் தாத்தாவையும் அப்பாவையும் பார்த்த எனக்கு இப்படிபுதிதாக பார்க்க வைப்பது எது? என்று புரியவில்லை.


நான் கூறவந்தது இதைப்பற்றி அல்ல... ஒட்டுமொத்த பேருந்து பயணிகளும் கண் இமைக்காமல் கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு பயணிக்கும் நள்ளிரவு அனுபவம் யாரவது பெற்றிருகிறீர்களா..? எனக்கு நேர்ந்தது.

அடர்த்தியான காற்று முகத்தில் தவழ, ஜன்னலோர பயணம் வழக்கமாக அமைந்தது. தூங்கியும் தூங்காமலும் பயணிக்க எதுவாய் ஹெட் போன் காதில் அலறிகொண்டுருந்தது. சிறுவயதில் பயணங்களில் வரிசையாக நடப்பட்ட மரங்களை எண்ணிகொண்டேவருவேன். இப்போதெல்லாம் எண்ணுவதற்கு எண்ணமும் இல்லை, நட்டுவைத்த மரங்களும் இல்லை. தங்க நாற்கர சாலைத்திட்டம் எல்லா மரங்களையும் அழித்திருந்து.


குளிர் இரவின் அடர் தென்றல் முகத்தை சில்லிட்டது. ஓசூர் அடுத்துள்ள சூலகிரியில் பேருந்து மெதுவானது. வண்டியை ஓரங்கட்டினார்கள். சிறிது நேரம் கழித்து வேற்று பயணிகள் ஏற்றபட்டார்கள். பேருந்தில் இடம் இல்லாததை பார்த்து முகம் சுளித்துகொண்டார்கள். இன்னும் சில பேர் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தனர்.


அந்த பயணிகள் வந்த volvo குளிர் சாதனா சொகுசு பேருந்து break down-ஆம். அவசரமாக செல்ல வேண்டிய பயணிகளை மாற்று பேருந்துகளில் ஏற்றிவிட்டு கொண்டிருந்தார்கள் என்பதை அறிந்தேன்.  "இங்கபாரும்மா இந்த பஸ்ஸ விட்ட அடுத்த பஸ்சுக்கு 1 மணிநேரம் ஆகும்...கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிபோகபாருங்க இல்லைன்னா... நான் ஒன்னும் சொல்றதுக்கில்ல...!"

அநேக பயணிகள் மனது மாறி எங்கள் பேருந்துக்குள் ஏறி கொண்டார்கள். பெரும்பான்மை பயணிகள் இது தான் தங்களின் முதல் பயணம் போல விசித்திரமான முக பாவத்தோடு நின்றுகொண்டே பயணித்தார்கள். "இதற்க்கு நாங்கள் ஏன் முழித்துக்கொண்டு வந்தோம்" என்று நீங்கள் கேட்பது புரிகிறது.


நான்கு இளம்பெண்கள். பெண்களின் நெளிவு சுளிவுகளை நகல் எடுத்து காண்பிப்பதை போல உடை. நல்ல வழமையான உடல் வாகு. 'ஏசி அறையிலேயே இருந்திருப்பார்கள் போல' என்று சொல்வதை போல் நடத்துனர் அவர்களை மேலும் கீழுமாக பார்த்தார். ஆனாலும் மார்கழியின் நேரடியான குளிர் அவர்களின் மஞ்சள் நிறதேகத்திற்கு செர்ரி பழம் வைத்து தைத்தாற்போல் சிவந்துகொண்டிருந்தது. போயும் போயும் இந்த பேருந்தில் ஏற்றிவிட்டு விட்டார்களே என்ற கோபத்தில் இன்னும் கொஞ்சம் சிவந்திருந்தது. பார்க்க நன்றாகத்தான் இருந்தது. 

பத்திரிக்கை ஓவியர்களுக்கு தீனி போடுவதை போல நல்ல வடிவான முகம். வரைந்துவைத்தாற்போல் கண்கள்.நவீன பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு புதிதாக முளைத்த செல்போன் உறுப்பை அவர்கள் விடுவதாய் இல்லை.பேருந்தின் குலுக்கல்களில் கம்பியை பிடிப்பதா? செல்போனை பிடிப்பதா? என்று அவர்கள் தத்தளிக்கும் அழகை பார்க்க நன்றாகத்தான் இருந்தது.

அவர்கள் அணிந்திருந்த டீ-ஷர்ட்டின் எழுத்துகள் என் கவனம் கலைத்தது. என்ன வாசகம் எழுதியிருந்தது என்று முறைத்து முறைத்து பார்த்தேன். நம்புங்க... நான் வாசகத்தை மட்டும் தான் பார்த்தேன். ஒருவளின் டீ-ஷர்ட்டில் touch me என்று எழுதியிருந்தது. மற்றவளின் டீ-ஷர்ட்டில் think bigger என்று எழுதியிருந்தது ஏனோ ஒரு நிமிடம் எஸ்.ஜே.சூரியா நினைவில் வந்து சென்றார். பெருமூச்சை விட்டுக்கொண்டேன். இன்னொருவளின் டீ-ஷர்ட் எதோ சங்கேத வார்த்தைகளை கொண்டு நூல் நூற்றுருந்தது. காந்தியாரின் எளிமை அவளின் half drawer -ரில் தெரிந்தது. மற்றொருவள் நல்ல பருமன்.அவளின் மேலாடை தனது ஜீன்ஸைத்தொட்டும் தொடாமலும் இடுப்பை மறைக்கமாட்டேன் என அடம்பிடித்துகொண்டிருந்தது.


"டேய் மானங்கெட்டவனே வெட்கமே இல்லாம இத போய் பார்த்துகிட்டு இருக்கியே" என்று என் மனம் சொல்லவந்ததை நான் சட்டை செய்யவில்லை. பெங்களுருவில் இது போன்ற பெண்களை சர்வசாதாரணமாக பார்க்கலாம். ஆனாலும் இந்த cross cultural shock என்னை போன்ற ஊரான்களிடம் இருந்து வெளியேற்றுவது கடினமாகத்தான் இருக்கிறது. சற்றே சுதாரித்துகொண்டவனாய் சுற்றும் முற்றும் பார்த்தேன், எதிர்பார்த்தது போலவே அனைவரின் டார்கெட்டும் அந்த நால்வர் தான். என் பக்கத்தல் உட்கார்ந்தவர் வாய் பிளக்காத குறையாக பார்த்துகொண்டிருந்தார். 

சிறிது நேரம் ஓய்ந்தவனாய், ஜன்னலை பார்த்துகொண்டிருந்தேன். நிலவு பிரகாசமாக தெரிந்தது. பேருந்தின் வேகத்திற்கு நிலவு ஈடு கொடுத்துகொண்டிருந்தது. நீ அழகா.. நாங்கள் அழகா என்பது போல் நிலவும், அந்த நால்வரும் ஒரு சேர என் முன் ஓடிகொண்டிருக்கிறார்கள்.

பேருந்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. ஒரே ஒரு மஞ்சள் விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. தங்கமுலாம் பூசப்பட்ட தேகமாய் அவர்கள் என் முன்னே மின்னிகொண்டிருந்தனர். அக்காலத்தில் மன்னர்கள் நிலவு வெளிச்சத்தில் சோம பானம் அருந்துவார்களாம். இங்கே எனக்கான நிலவின் போதை அந்த பெண்களின் வடிவத்திலா வரவேண்டும்? எல்லோருக்கும் பாட்டில்களில் போதை வரும், எனக்கு இந்த north indian 'beti'களில் போதை வருகிறது. பார்க்க பார்க்க ஏக்கம் பீரிட்டதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

அவர்களின் ஒவ்வொரு செய்கைகளும் எனக்கு அபிநயம் பிடிப்பதை போல் இருந்தது. அப்போது தான் கவனித்தேன் காற்றில் காதில் மாட்டியிருந்த ஹெட் போன் கீழே விழுந்திருந்தது. எடுத்து மாட்டினேன். அரைகண்ணால்  தலையை சாய்த்துக்கொண்டு அவர்களையே பார்த்துகொண்டு பாடல் கேட்க்க முற்ப்பட்ட நேரம் இப்படியா அமையும். பாடல் இப்படி தான் ஒலித்தது.
"பாவை கண்டாலே நிலவு நெளியாதோ...
அழகை பார்த்தாலே அருவி நிமிராதோ...
கண்ணாடி உன்னை கண்டு கண்கள் கூசும் 
வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்
பருவ பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது."
"ஆடை கூட பாரமாகும் பாட்டு என் அடிவயிற்று பாரத்தை இன்னும் அதிகபடுத்தியது.  



இதெல்லாம் XX, XY, androgens, Testosterone, Dihydrotestosterone, Androstenedione, and Dihydroepiandrosterone (DHEA) போன்ற ஹார்மோன்களால் உருவாகும் இயற்க்கை என்று சுஜாதாவையோ, 'உயிர்மொழி' ஷாலினியையோ  துணைக்கு அழைத்தால் நீங்கள் நம்பப்போவதில்லை.

சக பயணிகள் ஒன்று போல நெளிந்துகொண்டிருந்தார்கள். வைத்த கண் வாங்காமல் ஒரு போதையில் தான் அவர்களும் இருந்திருக்கக்கூடும். வாணியம்பாடியில் ஏறிய 'பர்தா' அணிந்த பெண் அவர்களை பார்த்தும் பார்க்காமலும் அனுமானித்து கொண்டிருந்தாள்.அவள் கஷ்டம் அவளுக்கு.


ஒரு டோல்கேட் சந்திப்பில் பேருந்து நின்றுகொண்டிருந்தது பக்கவாட்டில் இருந்த கண்ணாடியில் என் முகத்தை பார்க்க நேர்ந்தது. காற்றில் கலைந்திருந்த முடியை சரிசெய்த பின்பும் முகத்தில் ஒரு தெளிவு இல்லை. ஒரு நிமிடம் பெண்களை வேகவைத்து தின்ற நொய்டா மனநோயாளியின் முகமும், காலையில் பேப்பரில் பார்த்த 'பெண்ணை நரபலியிட்ட சாமியாரின்' முகமும் வந்து போனது குற்ற உணர்சியாகத்தான் இருந்தது. கண்ணாடியில் 'நீ நல்லவனா கெட்டவனா என்று கேட்டு பார்த்தேன்...? அதே தான்... அதே பதிலை தான் சொன்னது.


பேருந்தின் சக பெண் பயணிகளும் அவர்களை உற்று நோக்க தவறவில்லை. தன்னை கட்டி போட்டிருக்கும் சேலையையும், தாலியையும் உச்சு கொட்டி பார்த்திருப்பார்களோ என்னவோ. அதிலும் ஒரு நடுத்தர பெண்மணியின் பார்வை நூற்றாண்டுகளின் கதைகளை பேசிற்று. சக வயதையொத்த ஒரு இளம்பெண், தோலுரிக்கப்பட்ட பிராய்லர் கோழியையும், தோலுரித்து தொங்கவிட்டுருக்கும் ஆட்டையும், பலியிடயிருக்கும் ஆடு புரியாமல் பார்க்குமே, அதை போல பார்த்துகொண்டிருந்தாள்.


இப்போது அவர்களின் உடல் சலித்துபோயிருந்து. என்னுடன் ஓடி வந்த நிலா... இப்போது காணவில்லை... எந்த திருப்பத்தில் அந்த போதையை கைவிட்டேனோ... இறங்கும் இடம் வரும் போது இவர்களையும் கைவிட தான் போகிறேன் என்பதை உணர்ந்த போது மனம் ஆசுவாசம் ஆனது. இறங்கும் இடத்தில போதை இறங்கியிருக்குமா என்று தெரியவில்லை...

வேலூரில் காட்பாடிக்கு செல்லும் பேருந்தில் அவர்கள் எறிகொண்டிருந்ததை கடைசியாக பார்த்தேன். காட்பாடி ஜங்கஷனில் இருந்து ரயிலில் சென்னைக்கு புறப்படுவார்களோ? என்று உத்தேசித்துகொண்டிருந்தேன்.


நான் தக்கோலம் இறங்கி, கல்லாற்று படுகையில் என் வீடு நோக்கி நடந்துகொண்டிருந்தேன்."வெளியே சென்று திரும்பிய பெண் ஆடையை உதறி சரி செய்து அணிந்தால், ஆயிரம் ஆயிரம் கண்கள் உதிர்ந்து கீழே விழுந்தன" என்று யாரோ, எங்கேயோ எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது. 'போதை' தெளிந்தது போல இருந்தது.