Tuesday, November 23, 2010

காண் என்றது கடல்...

      "அய்யோ... எவ்ளோ தண்ணி சூப்பர்ப்பா...", "கடலோட அந்தாண்ட பக்கம் என்னப்பா இருக்கு?","கடல்ல இருக்க தண்ணி பூமியிலுருந்து வெளிய கொட்டினா என்ன ஆகும்..?", "கடல் ஏம்ப்பா ப்ளு கலர்ல இருக்கு...","என்ன இப்படி உப்பு கரிக்குது", "சூரியன் தினமும் கடலுக்கு போயிட்டு வருதே, குளிச்சிட்டு வருதா?..., தண்ணிக்கு சுடாதா?"," பாற்கடல்ல பெருமாள் படுத்திருக்காரே இங்கருந்து பார்த்தா அவர் தெரிவாரா...?", "நம்ம பாலாத்துல தண்ணியே இல்லையே... இங்கேருந்து கொஞ்சம் கொண்டு போகலாமா..?"

பால்யத்தில் முதன்முதலாக அறிமுகமான கடலைப்பற்றிய என் ஆச்சரிய கேள்விகளை என் அப்பாவிடம் கேட்டது நினைவில் இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு கடல் பார்கிறேன். கடல் பால்யத்தின் கேள்விகளை இன்னும் தனக்குள் வைத்துகொண்டு ஆச்சரியத்தை மட்டும் நமக்கு அளித்துகொண்டிருக்கிறது. 

புவியீர்ப்பு, ராமன் விளைவு என அறிவியல் நம் முன் விரிந்துகிடக்கிறது, கடலை விவரித்துகொண்டிருக்கிறது. கடலின் ஆச்சரியங்களில் குழம்பியவன் விஞ்ஞானி ஆகிறான், அந்த ஆச்சரியங்களை அனுபவிப்பவன் கவிஞன் ஆகிறான். விஞ்ஞானி ஆனாலும் கவிஞன் ஆனாலும் எல்லோரும் கடலின் மடியில் குழந்தையாகிறோம் என்பதே நிஜம். கடலை குழந்தையாக பார்ப்பது எப்போதுமே அலாதியானது.

கல்லூரியின் கடைசி வருடங்களில், வேலைக்கான நேர்முக தேர்வுகளில் தோல்வி என பலமுறை கடலை வெறித்து பார்த்திருக்கிறேன். கையில் காசு இருக்காது, கண்ணில் படும் எந்த பொருளும் நமக்கு சொந்தமாக இருக்காது, ஆனால் இந்த உலகமே நம்முடையதாக இருக்கும். இந்த உன்மத்த நிலையில், சென்னை மாநகரத்தின் பல்லாயிரக்கான மக்கள்அங்கீகாரத்திற்காகவும், வாழ்க்கைகாகவும்  போராடிகொண்டிருக்கிறார்கள்... அவர்களின் ஒரே ஆறுதல் இந்த கடலாக தான் இருக்கும்.


கடல் நூற்றாண்டுகளாக பேசிக்கொண்டிருக்கிறது. கேட்பவர்கள் தான் யாருமில்லை. கடற்கரைக்கு வருபவர்கள் பெரும்பாலும் அவர்களின் சோகத்தையே கொட்டி முழக்குகிறார்கள். கடல் இனம்புரியாத ஒரு மென்சோகத்தை எல்லோரிடமும் பேச எத்தனிக்கிறது. கடலலை தான் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் மென்று முழுங்கி பின் செல்கிறது. அலை அடித்து அடித்து ஓய்வது மகிழ்ச்சியின் ஆரவாரம் இல்லை, விரக்தியின் குறியீடுதான்...

லெமூரியா கற்பனையின் உண்மை தமிழ் சாட்சியங்களை மென்று விழுங்கிய குற்றவுணர்ச்சியை கொட்டித்தீர்க்க முற்படுகிறதோ... தனுஷ்கோடி நாகரிகமும், சுனாமி உயிர்களையும் உண்டு செறித்தும் அடங்காத பசியின் ஏக்கமோ...? நந்திகடலின் கரையோரத்தில் அதனோடு ஊனோடும் உயிரோடும் வாழ்ந்து வந்த மூத்த குடியை கொத்து கொத்தாக கொன்றொழித்த பெரும்சோகத்தில் வெம்பிகொண்டிருக்கிறதோ...? பகலெல்லாம் வெளியே சுற்றி அலையும் ஆண் சூரியன், தினம்தோறும் இரவானதும் தன் காம அனலை உன்னுள் அமிழ்ந்து தகிப்பதில் உண்டான வெறுப்பா...?


 முகத்தில் அப்பும் உப்பு காற்று ஏதேதோ பக்கங்களை புரட்டிப்போடுகிறது.    இமைக்கும் கண்களை போல் கடலும் தன் அலையால் சிமிட்டி சிமிட்டி பார்த்துகொண்டிருக்கிறது யுகங்கள் கடந்து. 

கடற்கரையில் கூட்டம் பெருக ஆரம்பித்தது. எழுந்து சென்று அலைகளோடு என் கால்களை நனைத்துகொண்டேன். கால்கள் சில்லிட்டுகொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக அடி பாத மணல்கள் அரித்துசெல்லும் ஏகாந்த உணர்வை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெறுகிறேன். எனது காலின் சுவையை கடல் அறிந்து இருக்குமா..? என்னை போல மகிழ்ச்சி கொண்டிருக்குமா..? அந்த ஞாயிறு மாலையில் எத்தனையோ பேர் கடலோடு உறவாடியிருந்தார்கள்.

எத்தனை ஆயிரம் கால்கள்; எத்தனை விதமான கால்கள்; எனது ஒரு புறம் கறுத்த வெடித்து காய்ச்சிய கால்களோடு கடலிடம் தன்னை மறந்து கிடந்தார் ஒரு பெரியவர். மறுபுறம் தரையில் கூட பட்டுவிடாத மிக பதுவிசான பட்டு கால்களில் கடலை அனுபவித்துகொண்டிருந்தாள் ஒரு சீமாட்டி. "ஆயிரம் கால்கள் கடலை தழுவினாலும் கடல் தனிமையில் தான் இருக்கிறது" என்ற எஸ்.ராவின் வார்த்தைகளை நினைத்துகொண்டேன். கால் இல்லாத மனிதர் யாரவது இந்த கடலை தழுவியிருப்பாரா? இந்த ஏகாந்தம் அவருக்கு கிடைக்க பெற்றிருக்குமா...? முடவன் கொம்பு தேனுக்கு தான் ஆசை பட கூடாது... பொங்கும் கடலுக்கும் அலையின் நுரைக்குமா ஆசைபடகூடது... இந்த அலையின் ஆசிக்கு கூடவா தன்னை அசுவாசித்துகொள்ளகூடாது...  என் கால் இப்போது மணலோடு புதைந்துபோய் இருந்தது.

நடுகடலில் இருந்து யாரை பார்க்க இப்படி முட்டி மோதி அலையடித்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. அலைபாய்கிறது கடலும் மனமும்.எல்லோரும் பெரும்பாலும் ஒன்று போலவே கடலிடம் விளையாடுகிறார்கள். யாரும் புதிதாக கடலை அணுகவேயில்லை...

மனிதர்கள் போவோர் வருவோரை பார்த்துக்கொண்டே இருந்தேன். அன்றொரு நாள் ஒரு விபச்சாரி இதே கடற்கரையில் என்னை அழைப்பது போல் அழைத்து பாசாங்கு செய்தது காரணமே இல்லாமல் அப்போது நினைவுக்கு வந்தது.



காதலர் இருவர் கரையோரம் காலார நடை பழகி கொண்டிருந்தனர். அந்த காதலி ஒரு கையில் தன் செருப்பும் ஒரு கையில் தன் காதலனையும் பிடித்துகொண்டு ஒய்யாரமாக நடந்துகொண்டிருந்தாள். இரண்டில் ஒன்று எப்போது வேண்டுமானாலும்  கைவிடப்படும் என்று சிரித்துக்கொண்டேன்.



கூட்டம் மேலும் பெருக ஆரம்பித்தது. கடற்கரையை ஆக்கிரமித்த மனிதன்... என் கடல் சிந்தையையும் ஆக்கிரமிக்க தொடங்கினான். விடைபெற முனைந்தேன். ஒரு சிறுமி தன் அப்பாவிடம் கேட்டு கொண்டிருந்தாள் "அய்யோ... எவ்ளோ தண்ணி.... சுப்பர்ல ப்பா...."

Sunday, October 17, 2010

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்


கிழிசல் மிக்க பத்து ருபாய்
பயன்படாத நோட்டு ஒன்று  
கீதைகள் போதித்து சென்றது
கீதைகளும் பயன்படுவதில்லை
என்ற உண்மை புரியாமல்


காந்தியின் முகத்தில் சுத்தமில்லாத 
கைகளின் அழுக்கு அப்பியிருந்தது
அப்பழுக்கற்ற மனிதரின் முகத்தில் 
பூசப்பட்டது கரியாக கூட இருக்கலாம்


ரூபாய் நோட்டின் ஓரங்கள் மட்டுமே 
எப்போதும் கிழிபடுகிறது 
அரசாங்கத்தின் கொள்கைகள் விளிம்புநிலை
மனிதர்களை கிழிப்பதை போல 


வாங்க மறுத்த விலைபோகாத நோட்டு 
வெறித்து பார்க்கிறது என்னை 
அலைகழிக்கப்பட்ட பெண்ணை போல 
பதவிழந்த மந்திரியை போல


நோட்டில் பதிந்திருந்த அச்சுகள் 
எல்லாம் அழிக்கபட்டிருந்தது
ஈழமண்ணின் கொடூர சாட்சியங்கள்  
அழிக்கப்பட்டதை போல
கொதித்தெழுந்த கோப தமிழர்களின் 
உரிமைகள் அழிக்கப்பட்டதை போல


இந்த செல்லாக்காசு சென்றுவந்த 
பயணங்களின் களைப்பு அடர்ந்திருந்தது 
சிறுவன் தன் பாட்டி கொடுத்ததாய்  
ஊருக்கெல்லாம் காண்பித்து எக்களித்திருப்பான் 
ஒரு விசேடநாளில் ஏழைதகப்பன் பிள்ளைகளுக்கு
சீனிதின்பண்டன்களை வாங்கிகொடுத்திருக்ககூடும்
பால்யத்தில் தன்மாமன் பெண்ணுக்காய்  
கமர்கட்டோ ரசகுல்லாவோ வாங்கியிருக்ககூடும் 
கட்டணம் செலுத்தமுடியாத  வறுமைமாணவன்
அபராதமாக இதை கட்டியிரிருக்ககூடும்
குடிகார கணவன் தன்மனைவின் மார்பக
இடுக்கிலிருந்து பலவந்தமாய் எடுத்திருக்ககூடும்

வெள்ளாமைகளை விட 
வறுமைகளை தான்
அதிகம் நினைவு 
கொள்ளவைக்கிறது 
கிழிந்த நோட்டுகள் 

மைல்கள் கடந்து சென்றுவந்த காசு 
செல்லாக்காசாக சொல்லும் கதைகளில் 
செல்லாத ஓரங்களில் ஈ(ரா)றாக
கிழிந்து ஒலித்துகொண்டிருக்கிறது
எதிர்மறையாய்


Wednesday, September 8, 2010

'மற்றவள்' - ஒரு பார்வை...

என் ஆதர்ஷ எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் கதை திரைக்கதை வசனத்தில் "மற்றவள்" குறும்படம் பார்த்தேன். நண்பர்கள் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம். அவரின் முந்தைய படைப்பான "கர்ண மோட்சம்" குறும்படத்தை போல நிச்சயம் பல விருதுகளை வாங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 


புத்தக அங்காடிகளில் மிக அதிக அளவில் விற்று தீரும் சுயமுனேற்ற புத்தகங்களில் கூறப்படும் வெற்று அறிவுரைகளும், ஏற்கெனவே குறுகி போய் கிடக்கும் மனித மனங்களின் மனதில் இன்னும் இன்னும் சுயநல கருத்துகளையும் பரப்பி வியாபாரம் செய்கிறார்கள். ஆனால் எஸ்.ரா அவர்கள் ஒருபோதும் அறிவுரை வழங்குவதில்லை, அறிவை தான் வழங்குகிறார்.அங்கே தான் அவரின் எழுத்தாளுமையில் அனைவரும் கிறங்கிவிடுகிறோம்.

மெத்த படித்தவர்கள் பெரும்பாலும் ஞானியை போல் பேசுவார்கள். அனால் எஸ்.ரா அவர்கள் எப்போதும் ஒரு குழந்தையின் மனநிலையில் தான் உள்ளார். உயர்ந்த சித்தாந்தங்களையோ, புரியாத கோட்பாடுகளையோ காண்பித்து தான் அறிவாளி என்று காட்டிகொல்வது இல்லை. ஒரு குழந்தையை போல இந்த உலகத்தை கற்கிறார். அதை ஒரு குழந்தையை போல தன் வாசகர்களிடம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் விவரிக்கிறார்.ஒரு குழந்தையின் உலகத்தில் தன்னை அர்பணிக்கிறார். அவரை வாசிக்கும் ஒவ்வொவொரு முறையும் என்னுள் இருக்கும் குழந்தைத்தனம் இயல்பாகவே வெளிப்படுவது ஆச்சர்யம் இல்லை.


"மற்றவள்" குறும்படம் படைப்பு ரசனை என்ற அளவுகோளை தாண்டி அது ஏற்படுத்தும் விழிப்புணர்வு சமிபகாலங்களின் தவறான அணுகுமுறைக்கு சரியான மருந்தாக உள்ளது. படம் விதைக்கும் கேள்வி அசாதாரணமானது. " நான் ஏன் மின்மினியா இல்லை". படம் பார்க்கும் பொது இந்த கேள்வி என்னை உலுக்கியது.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் நகரத்தின் நாகரிக வாழ்க்கையில், ஒரே சொடுக்கில் இணையங்களின் அனைத்து தொழில்நுட்ப முன்னேற்றங்களை தெரிந்து கொள்ளும் திறமைசாலி மாணவர்களை உருவாக்கி கொண்டிருக்கும் இதே நாட்டில் தான் தன் பாவாடை நாடவை கூட மாற்ற முடியாத, முக்கோணம் எப்படி இருக்கு என்று தெரியாத- 'ஈசல்' போன்ற சிறுமிகள் பயிலுகிறார்கள்.
இத்துனை ஏற்ற தாழ்வுகளில் படிக்கும் மாணவர்களுக்கான சமத்துவ தகுதி தான் இந்த மானங்கெட்ட தேர்வு முறைகள்... இந்தியாவின் சமத்துவம் தேர்வுகளில் தான் வெளிபடுகிறது.

அதன் வெளிப்பாடு தான் சமிபத்திய போலி மதிப்பெண் சான்றிதழ் குற்றம்.  நகரத்தில் படிக்கும் அறிவாளி மாணவர்களெல்லாம் நல்ல வசதிகளோடு அதிக  இடங்களில் "தகுதியோடு" (கவனிக்க "தகுதியோடு") சுயநிதி கல்லூரிகளில் சுயம் இழந்து படித்து நாட்டை காப்பாற்ற... பெரும்பான்மை வசதி இல்லாத ஏழை மாணவர்கள் குறைந்த இடங்களை வைத்துள்ள அரசு கல்லூரிகளில் கால் கடுக்க காத்துகொன்டிருக்கிறார்கள். இந்த குற்ற பின்னணியின் ஆணி வேரை தான் இந்த படம் மறைமுகமாக அலசுகிறது.  இந்த குற்றத்தில் மாட்டி கொண்ட அநேக மாணவர்கள் ஊராட்சி பள்ளிகளில், வசதி குறைந்த, ஆசிரியர்கள் இல்லாத கிராம பள்ளிகளில் படிக்கும் முதல் தலைமுறை மாணவர்கள் தான். 

இங்கே குற்றங்கள் நியாயபடுத்துவதாக கருதாதீர்கள். ஆனால் நியாயமான குற்றங்கள் இங்கே கருதபடுவதேல்லை என்பது தான் என் வருத்தம். 

லட்சகணக்கில் நிதியை கேட்கும் சுயநிதி கல்லூரிகளை ஒடுக்கி இருந்தால் எப்படியாவது மிக குறைந்த கட்டணத்தில் அரசு இடங்களை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி எதிர்கால இந்தியா குற்றவாளி கூண்டில் நின்றிருக்குமா...? வருடா வருடம் "அதிக  தொகை வசூலிக்கும் கல்லூரிமீது நடவடிக்கை எடுக்க படும்" என்ற அறிவிப்பும், "வரும் ஆண்டுகளில் ஐ. டி யில் ஒரு லட்சம் பேருக்கு வேலை என்ற வியாபார தந்திரமும்" அதை கையாளுகின்ற கல்வி காவலர்களும் தான் உண்மையான குற்ற வாளிகள் என்பது நான் கூறி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 

இதை எல்லாவற்றையும் களைத்தெறிந்து பணமுதலைகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொன்முடியையும் ஜெகத்ரட்சகனையும் நம்பிக்கொண்டு இருக்கிறோமே... இதை விட ஜனநாயக சீர்கேடு வேரேதும் இருக்க முடியாது.

போலி மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பித்த மாணவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்த நீதிமான்களே... இதுவரை எத்தனை அடிப்படை வசதிகள் இல்லாத கல்லூரிகளையும், அதிகபடியான கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளையும், ஆகியவற்றின் அங்கீகாரத்தையும் ரத்து செய்திருக்கிறீர்...? அப்படி ரத்து செய்வீர்களேயானால் சம்பத்தப்பட்ட அமைச்சர்களின் கல்வி நிறுவனங்களையே ரத்து செய்தாக வேண்டும்... அந்த ஜனநாயக புரட்சிகளோ.. அற்புதங்களோ.. நிகழபோவதில்லை... 

முற்றிலும் தகுதியில்லாத ஆசிரியர்களுக்கு போலியான சான்றிதழ்களை ஆய்வின் பொது கொடுத்து பிழைப்பு நடத்தும் கல்வி காவலர்களின் கேவலத்தை நான் படித்த பல்லவன் பொறியியல் கல்லூரியிலேயே பார்த்திருக்கிறேன்...

பள்ளிக்கூடம் வாய்க்க படாத அந்த சிறுமி பென்சிலை பார்த்ததும் பரவசம் கொள்வதும், தான் எழ்துவதை மற்றவர்கள் பார்க்கும் போது கூச்சமென ஓடி ஒளிவதும், ஈசல் நம் மனதில் பதிந்துவிடுகிறாள். "படிக்கிற பிள்ளைக பள்ளிகொடம் வரலேன்னா நியாபகம் வச்சிபீங்க.... நான் படிக்காதவ... மக்கு... என்ன எப்படி நியாபகம் வச்சிபீங்க..." என்று தன் ஆசிரியரை கேட்கும் இடத்தில் ஒட்டு மொத்த கல்விமுறையையும் கூண்டில் ஏற்றுகிறாள்.

ஈசல் என்கிற சி.மகேஸ்வரி, படிக்க முடியாமல் போன விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதியாகவே அவள் ஆசிரியருக்கு கடிதம் எழுதுகிறாள். அவளின் கடிதத்தில் கண்டனம் தெரிகிறது,ஆசை தெரிகிறது, ஏக்கம் தெரிகிறது, ஆற்றாமை தெரிகிறது, அனுபவம் தெரிகிறது. சிந்திக்கவே விடாத கல்வி முறையில் பயின்ற நமக்கு இந்த படம் மிகுந்த சிந்தனைக்குரியது....

'தாரே ஜாமீன் பர்', '3 இடியட்ஸ்', போன்று மிக பெரிய அளவில் கொண்டாடப்படவேண்டிய உட்கருத்து மிக லாவகமாக பொதித்து வைத்திருப்பதை படம் பார்ப்பவர்கள் உணருவார்கள். 

மனதை கசக்கும் சோகம் இல்லை. பார்வையாளர்களிடம் பரிதாபத்தை யாசிக்கவில்லை. மிக சாதாரண யதார்தத்தை முகத்தில் அறைகிறது. கண்டுகொள்ளாமையும், புறக்கணிப்பும் எவ்வளவு கனமானது..? கதைகளே இல்லாத மசாலா திரைப்படங்களை பார்த்து பழகிய நமக்கு ஈசல் போன்ற எத்தனை கதைசொல்லிகளை இழந்திருப்போம். நிச்சயம் எல்லா பள்ளிகூடங்களிலும் ஆசிரியர்களுக்கும் போட்டு காட்டவேண்டிய படம். பார்த்து உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்... 
மற்றவள் குறும்படத்தின் காணொளியை காண இந்த இணைப்பை சொடுக்குங்கள்...
 http://www.youtube.com/watch?v=_Al94vZlxHs 

பின்குறிப்பு:  
கல்வியின் உன்னதங்களை அறியாத முன்னாள் சாரயங்காய்ச்சிகலாகிய, முன்னாள் கட்ட பஞ்சயத்து ரவுடிகளும்மாகிய இந்நாள் கல்விகாவலர்களுக்கும், கல்விநிறுவனங்களின் நிர்வாகிகளுக்கும் அவசியம் போட்டு காண்பித்துவிடாதீர்கள்... அப்படியே பார்த்தாலும் அவர்களுக்கு புரிய போவது இல்லை என்பது வேறு விஷயம்...

Monday, August 16, 2010

ராவணன் சீதையின் பக்...பக்...பக்... காதல்...

               சமிபத்தில் மணிரத்தினம் அவர்களின் ராவணன் படம் பார்த்தேன். படம் நிறைய விமர்சனங்களை தாங்கி வெளியே வந்திருப்பதை யாவரும் அறிந்ததே. நான் அந்த விமர்சன எல்லைகளுக்குள்  போக விரும்பவில்லை. குரு படத்தில் ஒரு வசனம் வரும். மாதவனை பார்த்து குருபாய் தேசிகன்(அபிஷேக்) கூறுவார். "நீ குருபாயை ஜெயிக்கணும் என்றால் நீ குருபாயாக  இருக்கணும்..." என்று. அதேபோல் மணிரத்னத்தை விமர்சிக்க வேண்டும் என்றால் நாம் மணிரத்னாமாக இருக்க வேண்டும். ஆகவே நான் அதற்குள் போக விரும்பவில்லை. 

        கதைகளங்களின் நேட்டிவிட்டி குறித்த முரண்களை எல்லாம் தாண்டி அந்த படத்தில் கையாளபட்டிருக்கும் நுண்ணிய காதல், மிக நுட்பமான எதிர்பாலின தோழமை-இறுதி காட்சியில் ஐஸ்வர்யாராய்யின் பக்,பக்,பக், வசனத்தில் இருந்து வெளிபடுவது, எனக்கு என் கல்லூரி நாட்களில் நான் எழுதிய நாடகம் ஒன்றை நினைவுபடுத்துகிறது. ராமனின் சந்தேக பார்வையை குறித்து நிறைய புனைவுகள் நவீன இலக்கியத்தில் காண படுகிறது... அதிலேயும் பெண்ணுரிமை குறித்து பேசும் அனைத்து எழுத்தாளர்களும் இந்த புனைவுகளை நிச்சயம் தழுவி இருப்பார்கள். சமிபத்தில் கற்றது தமிழ் இயக்குனர் ராம் அவர்கள் கூட ராமனின் ஆணாதிக்க சந்தேகத்தை, சீதையும்-அசோகாவனத்தில் உள்ள புறாவும் பேசிகொல்வது போல ஒரு சிறுகதை தீட்டி இருந்தார்.


என் கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் சுதந்திர தினத்திற்கு நாடகம் ஒன்றை போடுவதற்காக தலைப்பை தேடிகொண்டிருந்தேன். அப்போது சில நாட்களுக்கு முன்னர் ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. எழுத்தாளர் ராசி.அழகப்பனும், நடிகர் கமல்ஹாசனும் ஒரு கதைவிவாதத்தில் இந்த கான்செப்டை பகிர்ந்துகொண்டதாக படித்தேன். சீதை தன் கற்பை நிரூபிக்க அக்னி குண்டத்தில் இறங்க, அந்த அக்னி குண்டத்தில் அக்னி தேவனுக்கும் சீதைக்குமான காதல் உரையாடலாக இந்த புனைவு பயணிக்கிறது... ஒரு வேலை வருங்காலத்தில் இதை எதாவது ஒரு கட்டத்தில் தன் படங்களில் கமல் அவர்கள் இதை பயன்படுத்தக்கூடும். அவர்களின் அந்த விவாதத்தை நான் என் நாடகத்திற்கு கருப்பொருளாக கொண்டு உருவாக்கினேன். 

இரண்டு நாட்கள், எல்லா மன்த்லி டெஸ்ட்களிலும் பைலாகி, அசைன்மென்ட், இம்போசிஷன் எல்லாம் அனுபவித்து எழுதிய வரலாற்று பெருமை இந்த நாடகத்துக்கு உண்டு. அப்படி எழுதியும் இந்துத்வா காலேஜ் அதற்கு அனுமதி தரவில்லை என்பது வேறு விஷயம். எனது வசன கவிதையை மிகவும் பாராட்டி ஊக்குவித்ததோடு நிறைய விமர்சனங்களையும் முன் வைத்து அறிவூட்டிய நான் மதிக்கும் ஒரே ஆசிரியர் திரு.ஜெயமணி மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. பழுத்த ஆன்மிக சிந்தனைவாதியாகவும், முற்போக்காளரும், சமுக சேவகருமான திரு.ஜெயமணி அவர்கள், என் கத்துக்குட்டி துடுக்குத்தனத்தை பாராட்டியது மட்டும் அன்றி என் பல கத்துக்குட்டி நாடகங்களுக்கும் (அரங்கேற்றம் காணாத) பல ரசவாத சிந்தனைகளுக்கும்  முதல் ரசிகராகவும், விமர்சகராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆத்திகம் நாத்திகம் என்ற நூற்றாண்டு விவாதங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. பெண்ணுரிமை குறித்த புனைவு என்ற அளவுகோலில் மட்டும் ராம பக்தர்கள் பார்த்தல் ரத்த கொதிப்பை குறைத்துகொள்ளலாம்.    


****************************************************
 ராவணன் சீதையின் பக்...பக்...பக்... காதல்...
****************************************************
இடம்: ராவணனை அழித்த கையோடு சீதையை சந்தேகித்து அக்னிகுண்டத்தில் ஊரார் முன்னே இறங்க சொன்ன இடம்...
கதாபாத்திரங்கள்: சீதை, அக்னிதேவன்.

அக்னிதேவன்: வாருங்கள் தேவி...தங்கள் வரவால் நாணும் சற்று குளிர்ந்துபோனேன்... தங்கள் வரவின் நோக்கம் என்னவோ...?

சீதை: மாசுபடாத மல்லிகைப் பூ நானும்;
மறுதளித்துவிட்டன் மாதவன் என்னை; 
மண்டியிட்டு கூறியும் மனமிறங்கவில்லையே;
மணவாளன் கூறியதால் நின் வாசல் தேடி வந்தேனே;

அக்னிதேவன்: மனமென்னும் குரங்கின் பால் மாட்டிகொண்டன் மாதவன்; மடைதிறந்த அன்பாளன்;வான்புகழ் அறிவாளன்; 
அணுதினமும் அவனிக்கும் அவனா உன்னை அவமானபடுத்தியவன்? 
மணமில்லா நார் ஒன்றை வாச நறுச்சென்டென்று எண்ணிவிட்டேன்...தவறு..!

சீதை: இருவரின் நோக்கில் காதல் மலர்ந்தது - கன்னிமாடம் துறந்தேன்;
கைகேயின் சதியில் வீடு முறிந்தது - அரன்மாடம் துறந்தேன்;
ஊழ்வினையின் உன்னதம் அறிந்தவன் - உபத்திர 
உபநிடதங்களில் ஊறி திளைத்துவிட்டான்;
ஊருக்கு பயந்த பேடியாய்  - என் கணவன்; 
போரிலே பேரெடுத்த மதிப்பை காப்பாற்ற மனைவியை மாசடையவைத்துவிட்டான்; 
இனி அவனிடன் வாழ்வது அறிவற்றது; அன்பற்றது; 
அந்நாளில் அயராத காதல் எல்லாம் 
ஊராரின் பேச்சுக்கு அயர்ந்து போனது; 
மனதின் பாரம் கனத்துப்போனது; 
இனி வேண்டாம் அந்த வாழ்க்கை; எடுத்துகொள் தேவரே; நின் அனல் கைகளில்என்னை அணைத்துகொள்வாயாக...!!!

அக்னிதேவன்: ஆன்றவிழ்ந்த அவையோர் முன்னிலையில் 
அவிந்து போவேன் என்று 
அறைந்துவிட்டு வந்த அமிழ்தே...!
நின்னை எப்படி அவிப்பது?! அவ்வாறு செய்யேன்...அறிவில்லா ராமனின் அறியாமை உண்மையாகிவிடதா..?
ஜனகரின் மைதிலியே..! 
நான் சொல்வதை கேட்டு என்னையும் சராசரி ஆணாக்கி விடாதே...! 
மாறாத பதுமையின் பால் காதல் கொள்ளும் கனவான்களில் நான் மட்டும் விதிவிலக்கா? 
நாணும் காதல் கொண்டேன்! தங்கள் மேல் தான்...! ஆச்சர்யம் வேண்டாம்; அனுதாபத்தோடு கேளுங்கள்!... இந்த ஒரு தலை காதலின் கலையாத கனவு காதலை...?!

பனிகாற்று பரவும் ஈழ பிரதேசம்; 
கூதிர்கால குளிருக்கு எண்ணெய் ஊற்றி 
என்னை வளர்த்தனர் ராவண சேவகிகள்; 
அது அசோகா வனம்; உன் அழகை 
அடைய ராவணன் ஏற்படுத்திய அழகிய வனம்; 
சோலைபூக்களில் சோரம்போனவளாய்... 
சோமன் கனவில் காமனை தேடுபவளாய் 
உன் பார்வை இருந்ததை கண்டு  
என்னையும் குளிர் தொற்றிகொண்டது...
அது வரை வெயிலின் உக்கிரத்தை அறிந்திராத நான், அன்று தான் குளிரின் அடர்த்தியை சுள்ளென்ற சுகம் என்னை ஆட்கொண்டது... 
அன்று நான் குளிர் தென்றலில் வெட்கத்தில் நெளிவதை வெளிப்படையாய் காட்டினேன்... காற்றின் நாவுகளில் கவிதைபேசும் கவின்மிகு பார்வையில் கரைந்துபோனேன்;

புரிகிறது!..தேவி நான் கொஞ்சம் எல்லை மீறுகிறேன் தான்..
சங்கோஜம் வேண்டாம்... நான் கொண்ட காதல் அன்றே என் எல்லையில்  எரிந்துவிட்டது...!!

   
அனுமன் ஏந்தி வந்த கணையாழியில் தெரிந்தது நீ நின் கணவன் மேல் வைத்திருந்த கலையாத காதலை; அன்றே அது கலைத்துவிட்டது நான் உன் மேல் கொண்ட காதலை; என் காதலின் இயலாமையில், உக்கிரமடைந்து இந்த இலங்கையையே அழிக்க முற்பட்டேன்... 

உன் காதலுக்காக என் காதலை தியாகம் செய்தேன்;இன்று நீயே வந்து ஏற்றுக்கொள் என்கிறாய்; இப்போதும் உனக்காகவே தியாகம் செய்கிறேன்;பெண் சமுகத்தின் உன்னத கர்ப்பு ராமன் போன்றோரின் ஆணாதிக்க மனிதர்களிடம் கறைபட்டு தான் கிடக்கிறது.... என் செய்வது...

சீதை: ராவணன் கூட என் அனுமதிக்காக காத்திருந்தான்; 
நானே ஏற்றுகொள் என்ற போதும் உன் காதலை என் நலனுக்காக தியாகம் செய்தாய்; ஊரே ராமராஜ்ய கனவு கண்டு நீதியை வகுத்துகொண்டிருக்க, ராமனோ ஊருக்காக என் மனதை வாள்கொண்டு வகுக்கிறான்;
தூயவன் ராமன் ஏகபத்தினி விரதன் என்று பட்டம் சூட்டுகிறார்கள்,யாருக்கு தெரியும் அவன் ஏக பத்தினி விரதனா? இல்லை ஏக பட்ட பத்தினிகளை கொண்ட விரகனா..? பெண் மட்டும் சந்தேகிக்க கூடாது; பெண்ணை மட்டும் தான் சந்தேகிக்க வேண்டும்; பெண் என்றாலே சோதனைக்கு உரியவள் தான் தேவரே...!

அக்னிதேவன்: சரி! சரி! நேரம் ஆகிவிட்டது இன்னும் கொஞ்சம் நேரத்தில் நீ வெளியே போகவில்லை என்றால் மன்னருக்கு ரகுவம்சம் தழைக்க வேண்டும், ஆண் தனியாக துயரபடுவான் என ஆணாதிக்க சமுதாயம் இன்னொரு பெண்ணை பலிகடாவாக்கிவிடும்...
என் அக்னி கைகளை தளர்த்திகொள்கிறேன், செல்வாயாக..! வாழ்நாள் முழுவதும் ராமன் குற்ற உணர்ச்சியில் புழுங்கி தவிக்க வேண்டும்; அய்யகோ ஒரு பத்தினி பெட்டகத்தை, தன்னை நம்பி வந்த தன்னிகரில்லா தெய்வத்தை ஊருக்கு பயந்து சந்தேகித்தோமே..?என்று அவன் மனம் குமுற வேண்டும்;அடி நெஞ்சு புகைய வேண்டும்;


என்றாவது ஒரு நாள் பெண்கள் முழு சுதந்திரத்தோடு மூச்சு விடுவர்... அந்த மூச்சின் வெப்பம், நான் உன் மீது கொண்ட தார்மீக காதலை உலகம் நியாப்படுத்தும்; செல்வாயாக..!
என் அனல் கைகள் தகிக்கட்டும் ;
பெண் வாழ்வில் பூக்கள் பூக்கட்டும்;

****************************************** 
 நன்றி: திரு. கமல்ஹாசன், எழுத்தாளர் திரு.ராசி.அழகப்பன்.